அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

அஹ்மதிய்யத்தின் வெற்றிப் பயணம்


"நான் உமது தூதுச் செய்தியை பூமியின் எல்லை வரை எட்ட வைப்பேன்"என அல்லாஹ் ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்களுக்கு அறிவித்தான். அல்லாஹ்வின் இக்கூற்று மிகத் தெளிவாக நிறைவு பெற்றுக் கொண்டிருப்பதை இன்றைய மார்க்க உலகம் தொடர்பாக அற்ப அறிவுடையவர்கள் கூட நன்கு அறிவார். அஹ்மதிய்யா ஜமாத்தின் வளர்ச்சியில் வெறுப்பும் பகைமையும் பொறாமையும் கொண்டவர்கள் ஒவ்வொரு நொடியிலும் பல்வேறு தடைகளை ஏற்படுத்த முயன்றனர். வசைமாறிப் பொழிந்தனர், கேலி செய்தனர், வன்முறையில் ஈடுபட்டனர். ஆனால் எதிரிகளின் ஒவ்வொரு முயற்ச்சியின் விளைவும் அஹ்மதிய்யா ஜமாத்தின் வெற்றிப் பாதையின் படிக்கட்டுகளாகவே அமைந்தன. எதிரிகளின் கேலிகளும் வசைமாறிப் பொழிதல்களும் அஹ்மதியா ஜமாத்தின் மீது இறை
அருளின் மலர்களாக பொழியும்படி அல்லாஹ் செய்தான். காரணம், உழைப்பதற்கும், முயல்வதற்கும் உள்ள உரிமைகளை மனிதனுக்கு அல்லாஹ் வழங்கினான். ஆனால் விளைவை ஏற்படுத்துவது அல்லாஹ்வின் பொறுப்பிலே வைத்துக் கொண்டான்.

அல்லாஹ்வின் ஒளியை வாயால் ஊதி அனைத்துவிட முயலும் மறுப்பவர்களுள் ஒருவர் இந்த வெற்றிப் பயணத்தை கீழ்வருமாறு குறிப்பிடுகின்றார்:

"தங்களது இயக்கம் அகில உலக அளவில் பரவியுள்ளதாகவும், எல்லா நாடுகளிலும் வேர் ஊன்றி வளர்ந்து வருவதாகவும் கதை விடுவார்கள். இக் கதைகளில் ஒரு சில, பூனாவில் வாழ்ந்த ரஜ்னீஷ் என்ற செக்ஸ் சாமியாரின் இயக்கம் போன்ற வளர்ச்சி என்பதை நாம் நிதர்சனமாகக் கண்டுள்ளோம்."
(அந்நஜாத் மார்ச்1996 பக்கம் 23)

பொய், புரட்டு, மூட நம்பிக்கைகள், கற்பனைக் கதைகள் ஆகியவற்றில் மூழ்கி தன்மான உணர்விழந்துவிட்ட இவருக்கு அஹ்மதியா ஜமாத்தின் வளர்ச்சி. செக்ஸ் சாமியாரின் இயக்கத்தின் வளர்ச்சி போல் தென்படுகிறது. ஆனால் "சவூதி கெசட்" உலக முஸ்லிம்களுக்கு விடும் அழைப்பை பாருங்கள்.

"காதியானி குழப்பத்தை முறியடிப்போம்" என்ற தலைப்பில் " ஜித்தாவில் இருந்து வெளியான செய்தியில் பின் வருமாறு வரையப்பட்டுள்ளது:

"முஸ்லிங்கள் தங்களது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்தெழவேண்டும். பெரும் பொயயனாகிய (அல்லாஹ் காப்பானாக) மிர்ஸா அஹ்மதுடைய பிரச்சாரகரின் கடும் தாக்குதலை இன்று இஸ்லாம் எதிர்நோக்கியுள்ளது. காதியானி ஏமாற்றுக்காரர்கள் 148 நாடுகளில் நுழைந்து விட்டதாக குலாம் அஹ்மதுடைய வழி தவறிய மகனுடைய தலைநகரமான லண்டனிலிருந்து அறிக்கை விடப்பட்டுள்ளது. இவற்றுள் 57 நாடுகளில் முதன் முதலாக நுழைகிறார்களாம். புது நாடுகளில் வியட்நாம், கம்போடியா, கிரானடா போன்றவை உட்படும்.

இந்தியாவில் உள்ள ஏழைப் பகுதிகளில் குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் இவர்களுக்கு கிடைத்துள்ள வெற்றியில் இவர்கள் பெருமை கொள்கின்றனர். அங்கே ஒரு கிராமம் முழுவதும் குலாம் அஹ்மத்தின் மார்க்கத்தில் இணைந்து விட்டதாம்.]

காதியானைச் சேர்ந்த பொய்யரின் (அல்லாஹ் காப்பானாக) சீடர்கள் தங்களின் தவறான கொள்கையை அப்பாவி முஸ்லிம்களிடையே பரப்புவதற்காக செயற்க்கைக்கோள் தொலைக்காட்சியைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

காதியானிகளின் செயல்பாடுகளை தடை செய்ய வேண்டுமென இந்தோனேசிய அரசாங்கத்திடம் அங்குள்ள உலமாசபை கோரிக்கைவை வைத்துள்ளதாக ஜகார்த்தாவிலிருந்து அறிக்கை வந்துள்ளது. அவர்கள் இஸ்லாத்தை தவறாக காட்டுவதே இதற்க்குக் காரணம்.

உலகெங்குமுள்ள இஸ்லாமிய நாடுகளில் கிளர்ச்சியின் விதையை விதைக்கின்ற இவர்களுக்கெதிராக பெரும் ஜிஹாத் நடத்த வேண்டிய காலம் தாண்டி விட்டது என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது. அவர்கள் நம்முடையே உள்ளங்களில் ஊடுருவி விட்டபின் இஸ்லாத்தின்பால் திரும்புவதற்கான வழி தேட வேண்டியநிலை வருவதற்கு முன் இன்றே நாம் செயல்பட்டாக வேண்டும்.
(சவூதி கெஸட் 1-1-1996)

காதியானிகள் கதைவிடுவதாக அந்நஜாத் கூறுகிறது. பெங்களூரிலிருந்து வெளிவரும் "இஸ்லாமிக் வாய்ஸ்" அஹ்மதிஸம் 148 நாடுகளில் என்ற தலைப்பில் தந்துள்ள செய்தியைப் பாருங்கள்:

"லண்டன் : உலகின் 148 நாடுகளில் அஹ்மதிஸம் இன்று வெற்றியுடன் முன்னேறுகிறது. 11 ஆண்டுகளுக்கு முன் அது லண்டனில் வந்தபின் 57 புது நாடுகள் அதில் நுழைந்து விட்டன. இவ்வாண்டில் அஹ்மதியத்தில் வந்த நாடுகள் கம்போடியா, வியட்நாம், மெஸ்டொனியா, மற்றும் கிரானாடாவாகும். இங்கு ஒரு மாதம் முன் நடை பெற்ற அஹ்மதிய்யா ஜமாத்தின் ஆம் ஆண்டு மாநாட்டில் அதன் தலைவராகிய (கலீபத்துல் மஸீஹ்) அர் ராபி இதனை அறிவித்தார்.
(இஸ்லாமிக் வாய்ஸ் (பெங்களூர்) 1996)

அன்று சிலை வணங்கிகளிடையே இஸ்லாம் ஊடுருவிப் பரவுவதைக் கண்டும் உணராதிருந்த மறுத்தவர்கள் தொடர்பாக அல்லாஹ் கூறினான். "நாம் (இவர்களிடமுள்ள) பூமியை அதன் அருள்களிலிருந்தும் குறைத்துக் கொண்டு வருகின்றோம். (அதாவது அவர்கள் இஸ்லாத்தில் இணைந்துகொண்டிருக்கிறார்கள்) என்பதை இவர்கள் காணவில்லையா? இவர்களா மிகைத்து வெற்றி கொள்பவர்கள்? (21:45)

சவூதி அரசாங்கமென்ன முழு உலகும் ஓன்று திரண்டு இறுதி மூச்சு வரை எதிர்க்க முயன்றாலும் அஹ்மதிகலாகிய நாங்கள் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களால் இறைவன் நிலை நாட்டியுள்ள தீனுல் இஸ்லாத்திற்காக உலகமக்களின் உள்ளங்களை வென்றே தீருவோம்! ஏனெனில் அன்று ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களின் உள்ளங்களை வெல்லப் பயன்படுத்திய ஆன்மீகப் போர்கலன்களை அணிந்து அல்லாஹ்வுக்காக ஆன்மீகப் போரில் ஈடுபட்டுள்ளவர்கள் அஹ்மதி முஸ்லிம்கள் மட்டுமே ஆவார்கள். 

அஹ்மதிய்யா ஜமாத்தின் இந்த வெற்றிப் பயணம் 'செக்ஸ் சாமியாரின் இயக்க வளர்ச்சி போல்" அந்நஜாத்திற்கு தென்படுகிறதென்றால் அது அவர்கள் கண்களின் கோளாறாகும். திருக்குர்ஆன் மற்றும் அவர்களை ஏற்றுக் கொண்டவர்களின் வரலாற்றை நேர்மையோடு படித்து சிந்தித்தால் அந்நஜாத்தாலும் தங்களின் பார்வையின் கோளாறை உணர முடியும். அல்லாஹ் அவர்களின் கண்களையும் திறப்பானாக. ஆமீன்.