கேள்வி: கலிமா
கூறுபவரையும், கிப்லாவை முன்னோக்கித் தொழுபவரையும் காபிர் என்று கூறுவது
சரியானதல்ல” எனத் தாங்கள் ஆயிரக்கணக்கான இடங்களில் எழுதியுள்ளீர்கள்.
இதிலிருந்து நம்பிக்கையாளர்களில் எவர்கள் தங்களை நிராகரித்தால் “காபிர்”
ஆகி விட்டார்களோ அவர்களைத் தவிர தங்களை ஏற்றுக் கொள்ளாததால் மட்டும் எவரும்
காபிர் ஆகமாட்டார் என்று தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அப்துல் ஹகீம் கான்
என்பவருக்கு “எனது தூதுச் செய்தி எட்டியபின்னர் என் மீது நம்பிக்கை கொள்ளாத
ஒவ்வொருவரும் முஸ்லிம் ஆகமாட்டார்” என எழுதியுள்ளீர்கள். “திரியாகுல்
குலூப்” என்ற புத்தகத்தில் என்னை ஏற்றுக் கொள்ளாததால் எவரும் காபிர் ஆக
மாட்டார்” என்று எழுதியுள்ளீர்கள். இப்போது நீங்கள் எழுதியதற்கும் இதற்கு
முன்னர் நீங்கள் எழுதியதற்கும் இடையில் முரண்பாடு உள்ளதே? விளக்கம் தருக.
பதில்: நீங்கள் காபிர் என்று கூறுபவரையும், என்னை நம்பாதவரையும் தனித்தனியாகப் பிரிக்கின்றீர்கள். ஆனால் இறைவன் பார்வையில் இவர்கள் ஒருவரேயாவர். எவர் என்னை ஏற்றுக் கொள்வதில்லையோ அவர் என்னை குறித்து, நான் அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவன் என்றே கருதுகின்றார். ஆல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவன் எல்லாக் காபிர்களையும் விடக் கொடிய காபிராக இருப்பதாக அல்லாஹ் கூறியுள்ளான்.
“அல்லாஹ்வின்
மீது பொய்யைப் புனைந்து கூறுகின்றவனை விடவும் அல்லது அல்லாஹ்வின்
வசனங்களைப் பொய்ப் படுத்துகின்றவனை விடவும் கொடியோன் எவன்? (திருக்குர்ஆன்
7:38 )
மேற்கண்ட
திருக்குர்ஆன் வசனத்திலிருந்து முதலாவதாக அல்லாஹ்வின் மீது பொய்யைப்
புனைந்து கூறுகின்றவர் கொடிய காபிராக இருக்கின்றார் என்றும் இரண்டாவதாக,
அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்படுத்துகின்றவர் கொடிய காபிராக இருக்கின்றார்
என்றும் தெரிகிறது. என்னைப் பொய்ப்படுத்துகின்ற ஒருவரது பார்வையில் நான்
அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனாக இருப்பதால் அது
உண்மையென்றால் நான் காபிர் மட்டுமல்ல, மாறாக கொடிய காபிராக இருக்கின்றேன்.
ஆனால், நான் அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனாக இல்லாமல்
இருந்தால் என்னை நிராகரிப்பவரின் மீதே அவரது “குப்ர்” வீழ்கிறது. இதைத்தான்
மேற்கண்ட வசனம் எடுத்துக் கூறியுள்ளது.
எனவே எவர் என்னை
ஏற்றுக் கொள்வதில்லையோ அவர் இறைவனையும் அவனுடைய தூதரையும் ஏற்றுக்
கொள்ளவில்லை. ஏனெனில் இறைவனும் அவனுடைய தூதரும் என்னைப் பற்றிச் செய்துள்ள
முன்னறிவிப்புகள் இருக்கின்றன. அதாவது ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
இறுதிக்காலத்தில் என்னுடைய உம்மத்திலிருந்து வாக்களிக்கப்பட்ட மஸீஹ்
தோன்றுவார் என முன்னறிவித்துள்ளார்கள். மேலும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் “மிஹ்ராஜ்” சம்பவம் நடைபெற்ற இரவில் மஸீஹ் இப்னுமர்யம்
இவ்வுலகிலிருந்து காலம் சென்றுபோன நபிமார்களோடு கண்டிருக்கின்றார்கள்.
மேலும் ஷஹீதாக விளங்கிய எஹ்யா (அலை) அவர்களுடன் அன்னாரை இரண்டாவது
வானத்தில் கண்டார்கள். மஸீஹ் இப்னுமர்யம் மரணித்துவிட்டதாகத்
திருக்குர்ஆனும் அறிவிக்கின்றது. இறைவன் எனது உண்மைக்கு சாட்சியாகத் மூன்று
இலட்சத்திற்கும் அதிகமான இறை அடையாளங்களை வெளிப்படுத்தியுள்ளான். மேலும்
விண்ணில் எனக்காகச் சூரிய, சந்திர கிரகணங்களும் ஏற்பட்டிருக்கின்றன.
இப்போது எவர்கள், இறைவனும் அவனுடைய தூதரும் கூறியவற்றை ஏற்றுக் கொள்ளாமலும்
திருக்குர்ஆனைப் பொய்ப்படுத்துகின்றவராகவும் இருக்கின்றார்களோ, மேலும்
தெரிந்து கொண்டே இறைவனது அடையாளங்களை மறுத்து என்னை அல்லாஹ்வின் மீது
பொய்யைப் புனைந்து கூறுபவனாகக் கருதுகின்றார்களோ, அவர்கள் எவ்வாறு
நம்பிக்கையாளர்களாக இருக்கமுடியும்.
அவர் ‘முஹ்மின்’
ஆக இருந்தால், நான் இறைவன் மீது பொய்யைப் புனைந்து கூறுவதன் காரணமாக
காபிராகி விடுகின்றேன். ஏனெனில் நான் அவரது பார்வையில் நான் அல்லாஹ்வின்
மீது பொய்யைப் புனைந்து கூறுபவனாக இருக்கின்றேன். அல்லாஹ் திருக்குர்ஆனில்
கூறுகின்றான்:
“நாங்கள்
நம்பிக்கை கொள்கிறோம் என்று காட்டரபிகள் கூறுகின்றனர். நீர் கூறுவீராக!
நீங்கள் (உண்மையிலேயே) நம்பிக்கை கொள்ளவில்லை. நாங்கள் (வெளிப்படையாகக்)
கட்டுப்பட்டோம் என்று நீங்கள் கூறுங்கள். ஏனெனில் (உண்மையான) நம்பிக்கை
இதுவரை உங்கள் உள்ளங்களில் நுழையவில்லை. (திருக்குர்ஆன் 49:15)
இதிலிருந்து
கட்டுப்பட்டு நடப்பவர்களையே அல்லாஹ் ‘முஹ்மின்’ என்று பெயரிடாத போது,
இறைவனது வசனங்களை பகிரங்கமாக பொய்ப்படுத்துவதிலிருந்து விலகாதவர்கள், நான்
அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறாதவனாகவும் “முஹ்மின்” ஆகவும்
இருக்கும் நிலையில் என்னைப் பொய்ப்படுத்தி நிராகரித்ததன் பிறகு அவர்கள்
“காபிர்கள்” ஆகி விட்டதைத் தாமாகவே ஏற்றுக் கொள்கின்றனர். என்னைக் “காபிர்”
என்று கூறியதன் காரணமாக அவர்கள் தங்கள் “குப்ரி”ன் மீது சாட்சி முத்திரை
இடுகின்றனர். (ஹகீகதுல் வஹி, ரூஹானி கஸாயின், தொகுதி 22, பக்கம் 167)