அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

நஜாத் மற்றும் p.j. பிரிவினர் முஷ்ரிக்குகள் இல்லையா? - 2


அடுத்து ஈஸா நபி (அலை) 2000 ஆண்டுகளாக உயிருடன் இருக்கிறார் என்ற ஷிர்க்கான கொள்கையை நிலைநாட்ட அபூ அப்தில்லாஹ் சாஹிப் எடுத்து வைத்துள்ள சான்றுகள் வேடிக்கையானவை. இதுவே இவர்களின் வாடிக்கையும், கோவை விவாதத்தில் பி.ஜே சாஹிபும் இதையேதான் எடுத்துவைத்தார்.

அன்று உயிரோடு இருந்த நபி(ஸல்) அவர்கள் இனிமேல் இறந்து போகக் கூடிய ஒரு தூதரே என 3:144 இல் கூறியிருப்பதைப் போலவே ஈஸா நபியும் இனிமேல் இறந்துபோகக் கூடியவர் என 5:76 இல் அல்லாஹ் கூறியிருக்கிறான் என்று அபூ அப்தில்லாஹ் சாஹிப் எழுதியிருக்கிறார்.

அப்படி என்றால் ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களின் மரணத்தை ஏற்க மறுத்த
உமர் (ரலி) அவர்கள் உட்பட பல நபித் தோழர்களுக்கு முன்னால் இந்த (3:145) வசனத்தை ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் ஏன் ஓதிக் காட்டினார்கள்? (3:145) வசனத்தை (5:76) வசனத்தையும் அபூ அப்தில்லாஹ், பி.ஜே. போன்றோர் இணைத்துப் பார்க்கத் தெரிந்தது போல் ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களால் கூட இன்று அபூ அப்தில்லாஹ் சாஹிபும் பி.ஜே சாஹிபும் உணர முடிந்த உண்மையை உணர முடியாது போயிற்று என்று சொல்ல வருகிறார்களா? ஈஸா நபி உயிருடன் இருக்கும் கிறித்தவக் கொள்கையை அன்று நபித்தோழர்களில் எவருக்காவது இருந்திருக்குமென்றால் (5:75) (43:61) வசனங்களை எல்லாம் எடுத்துவைத்திருப்பார்கள். ஆனால் அன்று எவருமே இன்று இவர்கள் காட்டும் எந்த வசனத்தையும் எடுத்துவைக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இதிலிருந்தே இது இவர்களின் கைச்சரக்கு என்பதை நடுநிலையோடு சிந்திப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும். தற்போது இறையருளால் பலர் புரிந்து கொண்டும் வருகின்றனர்.

அபூஅப்தில்லாஹ் சாஹிப் குறிப்பிட்டதுபோல், (பிஸ்மில்லாஹ்வையும் சேர்த்து) (3:145) இல் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இறந்து போகவில்லை. ஆயினும் இனிமேல் இறப்பவர்களே என்று கருத்து கொள்ள இடம் இருக்கிறது. காரணம் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் உயிருடன் நபித்தோழர்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். மேலும் அதே வசனத்தில், 'அவர் மரணமடைந்துவிட்டாலோ அல்லது கொலை செய்யப்பட்டாலோ நீங்கள் உங்கள் குதிக்கால்களில் திரும்பிச் சென்றுவிடுவீர்களா?' என்று அல்லாஹ் கேட்கிறான். இதுதான் அவர் இதுவரை மரணமடையவில்லை: கொலை செய்யப்படவுமில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது.

ஆனால் (பிஸ்மில்லாஹ்வையும் சேர்த்து) (5:76) ஆம் வசனத்தில் 'மர்யமின் மகன் மஸீஹ் ஒரு தூதரேயன்றி வேறில்லை, அவருக்கு முன்னுள்ள தூதர்கள் மரணமடைந்துவிட்டார்கள்'. என்று கூறிய பிறகுள்ள வாசகங்கள் அந்த வசனம் இறங்கும் நேரத்தில் நிச்சயமாக ஈஸா நபி மரணமடைந்திருக்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்துகின்றது. அல்லாஹ் கூறுகிறான்:

"அவருடைய தாயார் நேர்மையான பெண்ணாக இருந்தார். அவர்கள் இருவரும் உணவு உண்டு வந்தனர்."(5:76)

இங்கு அவர் ஓர் இறைத்தூதர்தான்: மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்ட உணவு உண்ணாத உடலை நாம் அவ்விருவருக்கும் வழங்கவில்லை என்பதை உணர்த்துவதற்காகவே அவர்கள் இருவரும் உணவு உண்டு வந்தனர் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். உணவு உண்ணாத உடலை இறை தூதர்களுக்கு வழங்கவில்லை என்ற (21:9) வசனத்தை இணைத்துப் பார்க்கும் போது, இது ஈஸா நபி மரணிக்கவில்லை: ஆயினும் இனிமேல் மரணிப்பவர்களே என்ற கருத்தை அல்ல; மாறாக உணவு உண்ணத் தேவையுடைய உடலைக் கொண்டிருந்த ஈஸா தற்போது உண்ணவில்லை. என்பதிலிருந்து அவர் மரணிக்கும் தன்மை கொண்டவர் என்பது மட்டுமல்ல; மரணித்தும் விட்டார் என்பதையே தெளிவுபடுத்துகிறது.

அந் நஜாத் அக்டோபர் (2010) இதழில் அதன் ஆசிரியர், ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களை இறைவன் தன்னளவில் உயர்த்தி இறுதி நாள் வரை உயிரோடு வைத்திருக்கிறான் எனக் குறிப்பிட்டிருந்தார், உணவு உண்ணத்தக்க உடலைப் பெற்றிருந்த நபிமார்களில் ஒருவரான ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் உண்ணாமலும், உறங்காமலும் (2000) ஆண்டுகளுக்கும் அதிகமாக உயிருடன் இருக்கின்றார் என்ற கிறித்தவர்களின் இந்த ஷிர்க்கான கொள்கைக்கு இஸ்லாத்தில் இடமேயில்லை. என்பதை நிரூபித்திருந்தோம்.

'காதியானிகளின் மீது பொய்க் குற்றச்சாட்டுகள்' என்ற உள் தலைப்பில் நம்மீது பிற முஸ்லிம்கள் கூறும் பொய்யான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்பதை ஜனாப் அபூ அப்தில்லாஹ் சாஹிப் பெருந்தன்மையுடன் ஒப்புக் கொண்டிருப்பதை நாம் பாராட்டுகிறோம். அது மட்டுமல்லாது சுன்னத் ஜமாத்துகளிடம் காணப்படும் பெரும்பாலான ஷிர்க், குப்ர், பித்அத் செயல்பாடுகள் காதியானிகளிடம் இல்லை என்ற நம்மைப் பற்றிய ஒப்புதல் வாக்குமூலத்தையும் நாம் மனமாற வரவேற்கிறோம். இதனால் அவருக்கு சிலர் எழுதிய கடுமையான விமர்சனங்களுக்கு அந்நஜாத் ஜனவரி இதழில் அவர் நேர்மையான பதில் எழுதியிருப்பதும் போற்றத்தக்கதாகும்.

திருச்சியில் (1987) பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற மாநாட்டில் நாம் விநியோகித்த பிரசுரங்களை மிஸ்பாஹிகள், ரஹ்மானிகள் ஆகிய அனைத்து ரக மௌலவிகளும் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் குதித்ததையும் காதியானிகளின் பிரசுரங்களிலுள்ள குர் ஆன், ஹதீஸுக்கு முரண்பட்ட கொள்கைகளை தெளிவுபடுத்த வக்கற்றவர்கள்தான் பிரசுரம் கொடுப்பதை தடுக்க முற்படுவார்கள். காதியானிகளின் பிரசுரங்களிலுள்ள தவறுகளை தெளிவுபடுத்த எம்மால் முடியும்; பிரசுரம் கொடுப்பதை தடுக்க வேண்டாம் எனக் கூறி பிரசுரம் கொடுக்க அனுமதித்தோம் என்ற சம்பவத்தையும் அபூ அப்தில்லாஹ் சாஹிப் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி மேற்குறிப்பிட்ட அனைத்து ரக மௌலவிகளும் காதியானிகளின்கேள்விகளுக்கு பதில் அளிக்க வக்கற்றவர்கள் என்ற ஒப்புதல் வாக்குமூலத்தையும் கூட அபூஅப்தில்லாஹ் சாஹிப் கொடுத்துள்ளார். ஆயினும் காதியானிகளின் தவறுகளை எம்மால் தெளிவுபடுத்தமுடியும் என்பது அப்பட்டமான பொய்யாகும். ஏனெனில் அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவந்திருந்த இவர்களின் கொள்கையைச் சேர்ந்த சிலர் அந்த நேரத்திற்குப் பிறகே அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் கொள்கைப் பற்றி நன்கு ஆய்வு செய்து உண்மையை உணர்ந்து இதில் இணைந்து விட்டனர். அது நஜாத் பிரிவினரிடம் தெளிவான பதில் இல்லை என்பதையும் அவர்களின் கொள்கையில் இருந்தவர்களே கண்டு கொண்ட உண்மையாகும்.

அடுத்து நஜாத் ஆசிரியர் இறுதி நபிக் கொள்கைக்கு, ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களே காத்தமுன் நபி - முத்திரை நபி - இறுதி நபி (33:40) எனக் குறிப்பிட்டுள்ளார்.

காத்தம் என்ற இந்தச் சொல் நஜாத் ஆசிரியர் குறிப்பிட்டிருப்பது போன்று திருக்குரானிலோ, ஹதீஸிலோ, எங்கேயும் ஒருமைச்சொல்லுடன் இணைந்து குறிப்பிடப்படவே இல்லை என்ற உண்மையை முதலில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். மாறாக, காத்தம் என்ற இந்தச் சொல் திருக்குரானிலும், ஹதீஸிலும் நபிய்யீன், அன்பியா என்ற பன்மைச் சொல்லுடன்தான் இணைந்து வந்திருக்கின்றது. அவ்வாறு காத்தம் என்ற இந்தச்சொல் பான்மையுடன், இணைந்துவரும்போது அதற்க்கு சிறந்தது , மேலானது, மேன்மையானது என்ற பொருளைத்தான் தருமே தவிர இறுதியானது என்ற பொருளை ஒருபோதும் தராது. திருக்குர்ஆன் நபிமொழிகளிலிருந்து நாம் பெற்ற உண்மையாகும். இதனை யாரும் மறுக்கவும் முடியாது: மறுக்கவும் கூடாது என்பதே இஸ்லாத்தை அதன் தூய வடிவில் உணர்ந்தவர்களின் நிலையாக இருக்க முடியும். இருக்கவும் வேண்டும். உதாரணமாக திருக்குரானில் வந்துள்ள காத்தமுன்னபியீன் என்ற (33:41) வசனத்திலும் நபிமார்களுக்கெல்லாம் காத்தம் - அதாவது சிறந்தவர் என்ற பொருளைத்தான் தருகின்றது. எனவேதான், நஜாத் ஆசிரியரும். 'காத்தமுன் நபி' என காத்தம் என்ற சொல்லுடன் ஒருமைச் சொல்லான நபி என்பதைத்தான் குறிப்பிட்டு எழுதியிருக்கிறாரே தவிர நபிய்யீன் என்ற பன்மைச் சொல்லைக் குறிப்பிடவில்லை. போலும்.!

ஹஸ்ரத் நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் நமக்கு விளக்கித் தந்த பொருள் இதுதான். உதாரணமாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அனா காத்தமுல் அன்பியாயி, வ அந்த யா அலிய்யு காத்தமுல் அவ்லியாயி." (தப்சீர் ஸாபி - காத்தமுன் நபிய்யீன் என்ற வசனத்திற்கான விளக்கவுரை பக்கம் - 111)

அதாவது, நான் நபிமார்களில் சிறந்தவனாக இருக்கிறேன், அலியே! நீர் வலிமார்களில் சிறந்தவராக இருக்கின்றீர்.

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தமது சிறிய தந்தை ஹஸ்ரத் அப்பாஸ் (ரலி) அவர்களைப் பார்த்து ஒருமுறை இவ்வாறு கூறினார்கள்:

"இத்மயின் யா அம்மி! ப இன்னக காத்தமுல் முஹாஜிரீன பில் ஹிஜ்ரத்தி கமா அன காத்தமுன்னபிய்யின்ன பின்னுபுவதி." (கன்சுல் உம்மால் தொகுதி 6 பக்கம் 178)

அதாவது, என சிறிய தந்தையே! நீங்கள் மன நிம்மதியுடன் இருப்பீர்களாக, நான் நுபுவத்தில் காத்தமாக (சிறந்தவனாக) இருப்பதைப் போன்றே நீங்கள் ஹிஜ்ரத்தில் காத்தமாக (சிறந்தவனாக) இருக்கின்றீர்கள்.

காத்தம் என்பதற்கு இறுதியானவர் என்ற பொருளைத் தர முடியாது என்பதை ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களின் இந்த விளக்கங்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள முடிகின்றது. அவ்வாறு இறுதியானவர் என்ற தவறான பொருளைக் கொடுத்தால் இந்த உம்மத்தில் நபி மட்டுமல்ல; ஒரு, வலியுல்லாஹ்வோ(இறை நேசரோ), ஒரு முஹாஜிரோ (இறைவனுக்காக தம் ஊரை விட்டு இடம் பெயர்ந்து செல்பவரோ) தோன்ற முடியாது என்றும் நம்ப வேண்டியது வரும். ஆனால் ஹஸ்ரத் அலி(ரலி) அவர்களுக்குப் பிறகு பல வலிமார்களும் (இறைநேசர்களும்), தோன்றியிருக்கிறார்கள் என்பதை நஜாத் கூட்டத்தினர் உட்பட எல்லா முஸ்லிம்களும் நம்புகின்றனர்.

திருக்குரானில் ( 33:41) வசணைமும் இக்கருத்தை வலியுறுத்துகிறது. அதில் இவ்வாறு வருகிறது:

"முஹம்மது உங்களில் எந்த ஆண்மகனுக்கும் தந்தை அல்லர், ஆனால் அவர் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றார். மேலும் நபிமார்களுக்கெல்லாம் காத்தம்(சிறந்தவர்) ஆகவும் இருக்கின்றார்."

இந்த வசனத்தில் 'லாகின்' (ஆனால்) என்ற சொல் வந்துள்ளது. இந்தச் சொல் அரபி மொழியில் இஸ்தித்ராக் என்பதற்காக வருகிறது என்பதை அரபி இலக்கண அறிஞ்சர்கள் குறிப்பிட்டுள்ளனர். இஸ்தித்ராக் என்றால் முந்தைய சொற்றொடறினால் எழும் ஐயத்தை நீக்குவதற்காக வருகிறது என்பதாகும். இயல்பாக 'ஆனால்' என்ற இந்தச் சொல் தமிழ் மொழி உட்பட எல்லா மொழிகளிலும் இதே பயன்பாட்டிர்க்காகத்தான் வருகிறது. உதாரணமாக, எவரும் வரவில்லை. ஆனால் செயத் வந்தார் என்று கூறுகிறோம். இதில் எவரும் வரவில்லை என்ற எதிர்மறை அம்சத்தைக் கொண்ட ஒரு சொற்றொடரைக் கூறிய பிறகு 'ஆனால்' என்ற (இஸ்தித்ராக்) சொல் வந்து விட்டால் அடுத்து வரும் சொற்றொடர் அதற்க்கு எதிராக நேர்மறை அம்சத்தைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது இலக்கண விதியாகும். எவ்வாறெனில், எவரும்வரவில்லை ஆனால் என்று சொன்னால் அதற்குப் பிறகு வரும் சொற்றொடர் ஸைத் வந்தார் என்று நேர்மறைக் கூற்றில் இருக்க வேண்டும். இல்லைஎன்றால், பொருளற்றதாகிவிடும். எவரும் வரவில்லை; ஆனால் ஸைத் வரவில்லை என்று கூறினால் அது அர்த்தமற்றதாகும்.

இதேமாதிரிதான் காத்தமுன் நபியீன் பற்றிய வசனத்திலும் லாகின் என்ற இஸ்தித்ராக் வருகிறது. முஹம்மது உங்களில் எந்த ஆண்மகனுக்கும் தந்தை இல்லை எனக் கூறி பௌதீகமான முறையில் அவர்கள் தந்தை இல்லை எனக் கூறுகின்ற அதே சமயத்தில், ஆனால் அவர் ஆன்மீகத் தந்தையாக இருக்கிறார் என்ற நேர்மறை அம்சத்தை எடுத்துக் கூறும் வகையில், அவர் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றார் என்று அல்லாஹ் கூறுகின்றான். தொடர்ந்து, அதைவிட மேலாக அவர் நபிமார்களுக்கு காத்தமாக (சிறந்தவராக், முத்திரையாக) விளங்குகின்றார் எனக் கூறுகிறான். இதன்படி, இனி அன்னாரின் சாட்சி முத்திரையில்லாமல் எவரும் நபியாக முடியாது என்ற பொருளையே தரும்.

இஸ்லாத்தின் பலவேறு மார்க்க அறிஞ்சர்களும் இமாம்களும் இந்தக் கருத்தை ஒப்புக் கொண்டிருக்கின்றார்கள். உதாரணமாக, ஹஸ்ரத் முல்லா அலிய்யுள் காரீ (ரக) அவர்கள் இவ்வாறு விளக்கம் தந்துள்ளார்கள்:

(கத்தமுன் நபிய்யீன் என்பதன்) பொருள் ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு அன்னாரின் மார்க்கத்தை (ஷரியத்தை) ரத்து செய்கின்ற, அன்னாரின் உம்மத்தைச் சேராத எந்தவொரு நபியும் வரமாட்டார் என்பதேயாகும்."(மௌலு ஆத்தே கபீர் பக்கம்: 59 )

இந்தக் கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்று இவ்வாறு அமைந்துள்ளது:

"நீங்கள் (ஹஸ்ரத் நபி (ஸல்)) அவர்களை காத்தமுன் நபிய்யீன் என்று கூறுங்கள்: அனால் அவர்களுக்குப் பிறகு எந்த நபியுமில்லை என்றுக் கூறாதீர்கள்". (தக்மில மஜ்மயி பிஹாரில் அன்வார் தொகுதி 4, பக்கம்: 85 )

ஹஸ்ரத் இமாம் அப்துல் வஹ்ஹாப் ஷிஹ்ரானீ (ரஹ்) அவர்கள் எழுதுகிறார்கள்: 

"எல்லா நுபுவத்தும் முடிந்துவிட்டது என்பதன்று; ஷரீஅத்துடைய நுபுவத் மட்டுமே முடிந்து விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்". (அல் யவாகியது வால் ஜவாகிர் தொகுதி 2, பக்கம் 24)

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தால் கடைசியானவர் என்ற பொருளைக் கொடுப்பதில் அவர்களுக்கு எந்த பெருமையுமில்லை என்ற இஸ்லாமிய கருத்தை தேவ்பந்த் மதரஸாவின் தோற்றுநர் மௌலவி முஹம்மது காஸிம் சாஹிப் நானுத்வி அவர்களும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அவர் கூறுகிறார்.

'ரெஸுலுல்லாஹ் அவர்கள் காத்தமுன்னபிய்யீன். ஆக இருக்கிறார்கள் என்பது, பொது மக்களின் பார்வையில், அன்னாரின் காலம், சென்ற கால நபிமார்களின் காலத்திற்கு பிற்பட்டது; நபி (ஸல்) அவர்கள் அனைவரையும் விட கடைசி நபியாவார்கள் என்ற பொருள்ளாகும். ஆனால் காலத்தால் முற்பட்டவராக இருப்பதிலோ, பிற்பட்டவராக இருப்பதிலோ தனிப்பட்ட முறையில் எந்த சிறப்பும் இல்லை என்பது அறிவுள்ளவர்களுக்கு மிகத் தெளிவான விஷயமாகும். பிறகு, 'ஆனால் அவர்கள் அல்லாஹ்வின் தூதராகவும் நபிமார்களுக்கு காத்தமாகவும் இருக்கிறார்' எனக் கூறுவது புகழ்ந்துரையாகும் என்பது எவ்வாறு சரியானதாக இருக்க முடியும்? இந்தப் பண்பை புகழ்ந்துரையாகக் கூறப்பட்ட பண்பு அல்ல என்று கூறுவீர்கள் என்றால், இந்த அந்தஸ்தை புகழ்ந்துரையின் அந்தஸ்து அல்ல எனக் கூறுவீர்கள் என்றால் அப்போது வேண்டுமானால் அந்த காத்தமிய்யத் காலத்தால் பிற்பற்றது(இறுதியானது) என்று கூறுவது சரியானதாக இருக்க முடியும். ஆனால் இஸ்லாத்தைச் சேர்ந்த எவரும் இ(இப்படிப் பொருள் கொடுப்ப) தை விரும்ப மாட்டார் என்பதை நான் அறிவேன்".(தஹ்தீருன்னாஸ் பக்கம் 3)

மேலும் அவர் கூறுவதைப் பாருங்கள்: 

"ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய காலத்திற்குப் பிறகும் ஒரு நபி தோன்றினால் அப்போது முகம்மதியா காத்தமிய்யத்திற்கு (முத்திரைக்கு) எந்த வித்தியாசமும் வந்து விடாது" (தஹ்தீருன்னாஸ் பக்கம்:28)

எனவே, நபிமார்களில் முத்திரையானவர் என்றால் காலத்தால் இறுதியானவர் என்பதல்ல என்ற உண்மையை மார்க்க அறிவுள்ளவர்களால் வியாலன்கிக் கொள்ள முடிந்திருக்கிறது. ஏனெனில் தேவ்பந்தி மதரஸாவின் தோற்றுநர் மௌலவி முஹம்மது காஸிம் நானுத்வி காதியானி அல்லவே! எனினும் அவரால் இந்த மேலான பொருளை விளங்க முடிந்திருக்கிறது. ஆனால் விளங்காதவர்கள், விளங்காதவர்களாகவே இருக்கிறார்கள் என்பதையும் இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

இதே கருத்தைதான் நபி மொழிகளும் எடுத்துரைகின்றன. ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் மரணமடைந்த போது ஹஸ்ரத் நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்:

"அவர் உயிரோடிருந்தால் கண்டிப்பாக அவர் உண்மை நபியாக இருந்திருப்பார்." (இப்னு மஜா - கிதாபுல் ஜனாயிஸ்)

ஹஸ்ரத் அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இப்ராஹீமின் கபர் மீது கை வைத்தவாறு, அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சயமாக இவர் நபியும் நபியின் மகனும் ஆவார் எனக் கூறினார்கள்" (தாரீகுல் கபீர் லி இப்னி அஸாகிர் பக்கம்:பதாவா அல் ஹதீஸிய்யா பக்கம்:176)

காத்தமுன்னபிய்யீன் என்ற (33:41) வசனம் ஹிஜ்ரி ஆம் ஆண்டில் இறங்கியது. ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் இந்த இறங்கி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஹிஜ்ரி ஒன்பதாம் ஆண்டில் மரணமடைகின்றார். காத்தமுன்னபிய்யீன் என்பதற்கு ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் பார்வையில் இறுதி நபி என்பது பொருள் என்றால் அன்னார் என்ன கூறியிருக்க வேண்டும்? இப்ராஹீம் உயிருடன் இருந்தாலும் அவர் நபியாக மாட்டார். ஏனெனில் நான் காத்தமுன்னபிய்யீன் ஆக இருக்கிறேன் என்றல்லவா கூறியிருக்கவேண்டும்.? அவ்வாறு கூறியிருந்தால் காத்தமுன்னபிய்யீன் என்பதற்கும் இவர்கள் கூறுவதுபோல், நபிமார்களில் இறுதியானவர் என்று பொருள் கொள்ள இடமிருக்கிறது. ஆனால் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களோ, அவர் உயிருடன் இருந்தால், உண்மை நபியாக இருப்பார் என்றல்லவா கூறியிருக்கிறார்கள்!

ஹஸ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவிப்பின்படி, இவர் ஒரு நபியும், நபியின் மகனுமாவார் என்ற ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் கூற்று இதனை மேலும் உறுதிப்படுத்துகிறது. இந்தக் கருத்தை நாம் மட்டுமல்ல, நமக்கு முன்னரே மார்க்க அறிஞ்சர்களும் கூறியிருக்கிறார்கள். ஹஸ்ரத் இமாம் முல்லா அலியுல் காரீ அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்:

"இப்ராஹீம் உயிரோடு இருந்து, நபியானாலும் அவர் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றியவராகவே இருந்திருப்பார். அத்தகைய சூழ்நிலையில் அவர் நபியாவது காத்தமுன்னபிய்யீன் என்பதன் கருத்தில் எந்த முரண்பாட்டையும் உருவாக்க முடியாது. ஏனெனில் காத்தமுன்னபிய்யீன் என்பதன் பொருள், ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் ஷரியத்தை ரத்து செய்யக் கூடியவரும், அவர்களுடையா உம்மத்தை செராதவருமாகிய எந்தவொரு நபியும் வரமாட்டார் என்பதேயாகும்".(மௌளு ஆத்தே கபீர் பக்கம்: 66,67)

அடுத்து இறுதி, கடைசி என்று கூட ஒரு நபிமொழியில் வந்துள்ளதே என்று சிலர் கேட்கலாம். அங்கேயும் காலத்தால் இறுதியானவர் என்ற பொருள் கொடுக்கவே முடியாது: ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் அந்தப் பொருள் கொடுக்கவில்லை என்பதற்கு அந்த நபிமொழியின் பிற்பகுதியே சான்றாகத் திகழ்கின்றது. உதாரணமாக,

நான் நபிமார்களில் இறுதியானவராக இருக்கிறேன். எனது இந்தப் பள்ளிவாயில் பள்ளி வாயில்களில் இறுதியானதாக இருக்கிறது என ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம், பாபு பஸ்லுல் ஸலாத்தி பீ மஸ்ஜிதில் மதீனா)

இதில், ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் மஸ்ஜிதே நபவியை பள்ளிகளில் இறுதியானது என்று கூறியிருந்த போதிலும் அதற்குப் பிறகும் பல்லாயிரக்கணக்கான பள்ளிவாயில்கள் கட்டப்பட்டுள்ளன. எனவே, பள்ளிகளில் இறுதியானது என்றால், இனி உலகத்தில் எந்தப் பள்ளிவாசலும் கட்டப்படக்கூடாது என்று பொருள் அல்ல, மாறாக இனி எனது பள்ளிவாயிலுக்கு எதிராக, விரோதமாக எந்தப் பள்ளிவாயிலும் காட்டப்படமாட்டாது. எந்த பள்ளிவாயில் கட்டினாலும் அது எனது இந்தப் பள்ளிவாயிலைப் பின்பற்றியவாறு கட்டப்படும் என்றே பொருள்படும். அவ்வாறே நபிமார்களில் இறுதியானவன் என்றால், காலத்தால் இறுதி நபியானவன். இனி எந்த நபியும் வரமாட்டார் என்று பொருள் அல்ல. மாறாக எனக்கு எதிராக, விரோதமாக எந்த நபியும் இல்லை; என்னைப் பின்பற்றிய நபியே வரமுடியும் என்றுதான் பொருளாகும்.

இறுதி என்றாலும் எந்தக் கருத்தில் தமக்குப் பொருந்துகிறது என்பதை ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களே நமக்குத் தெளிவு படுத்திவிட்டார்கள். அதாவது காலத்தால் இறுதியானவர் என்பதல்ல, அந்தஸ்தால் இறுதியானவர்; இனி அன்னாரைப் பின்பற்றாமல் எவரும் நபியாகவோ, சித்திக்காகவோ, ஷஹீதாகவோ, ஏன் சாலிஹாகவோ கூட ஆக முடியாது. இந்த உயரிய கருத்தைத்தான் நாம் திருக்குர்ஆன் 4:70 வது வசனத்தில் விளங்கிக் கொள்கிறோம்.

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது(அலை) அவர்கள் கூறுகிறார்கள்:

"நமது நபி (ஸல்) அவர்களை உண்மையாகவும், முழுமையாகவும் பின்பற்றாமல் சிறப்பு, மென்மையின் எந்தவொரு பதவியையும், கண்ணியம், நெருக்கத்தின் எந்தவொரு அந்தஸ்தையும் நாம் ஒருபோதும் பெற்றுவிடமுடியாது. நமக்குக் கிடைப்பதெல்லாம் நிழலாகவும், அன்னாரின் மூலமாகவும் கிடைக்கின்றது". (இஸாலே அவ்ஹாம் பக்கம்: 138)

"ஒவ்வொரு மேன்மையும் எனக்கு ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்)அவர்களைப் பின்பற்றியதன் மூலமாகக் கிடைத்திருக்கிறது."(ஹகீகத்துல் வஹி பக்கம் 150)

"நபிமொழிகளில் எத்தகைய வரவேண்டிய வாக்களிக்கப்பட்ட மசீஹைப் பற்றி தெரிய வருகிறதோ அவரின் அடையாளமாக, அவர் நபியாகவும் இருப்பார்: உம்மத்தைச் சேர்ந்தவராகவும் இருப்பார் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் மரியமின் மகன் உம்மத்தைச் சேர்ந்தவராக முடியுமா என்ன? அவர் நேரடியாக அல்ல: ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றியதனால், நுபுவ்வத் பதவியைப் பெற்றிருந்தார் என்று யார் நிரூபிப்பார்?" (ஹகீகத்துல் வஹி பக்கம்: 29)

எனவே, ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றியதன் மூலமாக ஒருவருக்கு நபிப் பதவி கிடைத்தல் என்பதுதான் அன்னாருக்கு கண்ணியமாகும் என்பதை வாக்களிக்கப்பட்ட மசீஹாகத் தோன்றிய ஹஸ்ரத் மிர்ஸா குள்ளம் அஹ்மது(அலை) அவர்கள் மிகத் தெளிவாக விளக்கி விட்டார்கள். திருக்குர்ஆன், ஹதீஸ் ஒளியில், இறையச்சத்துடன் ஆய்வு செய்தவர்கள் இதனை விளங்கியும்விட்டார்கள்.

அடுத்து, இறுதி நபிக் கொள்கை இன்று அல்ல, பழங்காலந்தொட்டே மக்களிடம் ஒரு நோயாக இருந்து வந்திருக்கிறது. இறைவன் இதனை வழிகேடு என்றும் எச்சரித்திருக்கின்றான். அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்:

"இதற்க்கு முன்னர் யூசுப் தெளிவான சான்றுகளுடன் உங்களிடம் வந்தார். ஆனால் அவர் உங்களிடம் கொண்டு வந்தது குறித்து நீங்கள் சந்தேகத்தில் இருந்தீர்கள். அவர் மரணமடைந்தபோது, அவருக்குப் பின்னர் எந்தத் தூதரையும் அல்லாஹ் ஒருபோதும் அனுப்பமாட்டான் என்று நீங்கள் கூறினீர்கள்." (40:35)

யூசுப் நபியின் காலத்திலும், அல்லாஹ் அவருக்குப் பிறகு எந்த ரசூலையும் அனுப்பமாட்டான் என்றே கூறி வந்தனர். இதை அல்லாஹ் திருக்குரானில் பதிவு செய்திருப்பதன் காரணம் இதே மாதிரி பிற்காலத்தில் முஸ்லிம் சமுதாயத்தில் கூறப்போகின்றார்கள். அவ்வாறு கூறி வழி கெட்டு விடாதீர்கள் என்று எச்சரிப்பதர்க்காகத்தானே தவிர வெறும் சென்ற கால கதையாக சொல்வதற்கு மட்டுமல். இதனை வசனத்தின் பிற்பகுதியும் உறுதிப்படுத்துகிறது.

"இவ்வாறே அல்லாஹ் வரம்புமீறுபவர்களையும், (இறை அடையாளங்களில்) சந்தேகம் கொள்பவர்களையும் வழிகேடர்கள் என்று தீர்மானித்து விடுகின்றான்". ( 40:35 )

அல்லாஹ் தன் தூதை எங்கு வைக்க வேண்டுமென்பதை அவர் நன்கு அறிகின்றான் என இறைவன் கூறுகிறான் (6:125) அதாவது எங்கு, எப்பொழுது, எவரை தூதராக ஆக்க வேண்டுமென்பதை இறைவன்தான் அறிகிறான். அவ்வாறிருக்கையில் இவர் இறுதியானவர் என்று அல்லாஹ்வோ, ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களே கூறாத நிலையில் இன்னும் அப்படிக் கூறுபவர்களை வழி கேடர்கள் என்றே அல்லாஹ் மேற்கண்ட (40:35) வசனத்தில் குறிப்பிட்டுள்ளான்.

சென்ற கால நபியின் சமுதாயத்தினர் சொன்ன இறுதி நபிக் கொள்கை தவறு, வழி கேடு என்பதை இறைவன் வெறும் கதையாகக் கூறவில்லை; படிப்பினைக்காகக் கூறுகின்றான். இல்லைஎன்றால் யூசுப் நபியின் சமுதாயத்தினர் கொண்டிருந்த தவறான இறுதி நபிக் கொள்கையை நமக்கு எடுத்துரைப்பதில் என்ன பயன் இருக்கிறது? அது மட்டுமல்ல அந்த எச்சரிக்கை நிகழ்காலத்திற்க்கும் பொருந்துகிறது என்பதை அடுத்தவசனம் தெளிவுபடுத்துகிறது.

"(வழி கேடர்களாகிய) அவர்கள் அல்லாஹ்வின் வசனங்கள் தொடர்பாக (அல்லாஹ்விடமிருந்து) தங்களிடம் வந்த எந்தச் சான்றுமின்றி வாக்குவாதம் செய்கின்றனர். இது அல்லாஹ்விடமும் நம்பிக்கை கொண்டவர்களிடமும் மிக வெறுக்கத்தக்கதாகும். இவ்வாறே ஆணவமும், அகங்காரமும் கொண்ட ஒவ்வொரு உள்ளத்திலும் அல்லாஹ் முத்திரைடுகின்றான்". (40:36 )

இறுதி நபிக் கொள்கை கொண்ட வழிகேடர்கள் எவ்வித இறைசான்றுமின்றியே வாதம் செய்கின்றனர். இவர்கள் அகங்காரம் கொண்டவர்கள் என்று அல்லாஹ் எச்சரித்துள்ளான். இத்தகைய வழிகேட்டிலிருந்து அல்லாஹ் முஸ்லிம்களை காப்பாற்றுவானாக.