அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

ஈசா நபி (அலை) அவர்களின் மரணம் - P.J யின் அறியாமை

திருக்குர்ஆன் விளக்கம் - ஈஸா (அலை) வருகை என்னும் தலைப்பில் பி. ஜைனுலாப்தீன், (ஒற்றுமை இதழில் 45 ஆம் பக்கத்தில் எழுதப்பட்ட திருக்குரானின் தவறான விளக்கத்திற்கு இங்கு விளக்கம் தரப்படுகிறது.

மௌலவி பி.ஜைனுலாப்தீன்: "மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயையும் இரண்டு கடவுளர்களாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று நீர்தான் மக்களுக்கு கூறினீரா? என்று அல்லாஹ் கூறும்போது, நீ தூயவன். எனக்கு உரிமை இல்லாததை நான் கூறுவது எனக்குத் தகாது. நான் அவ்வாறு கூறியிருந்தால் நிச்சயமாக நீ அறிவாய். என் மனதில் உள்ளதை நீ அறிவாய். உன் மனதில் உள்ளதை நான் அறியமாட்டேன் நீயே மறைவானவற்றை எல்லாம் நன்கு அறிபவன்! எனது இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள் என நீ எனக்கு

ஆணையிட்டதைத் தவிர (வேறு) எதனையும் அவர்களிடம் நான் கூறவில்லை. நான் அவர்களுடன் இருந்தபோதெல்லாம் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன் என்னை நீ கைப்பற்றிய போது நீயே அவர்களின் கண்காணிப்பாளனாக இருந்தாய். நீ ஒவ்வொரு பொருளையும் பார்க்கக்கூடியவனாக இருக்கின்றாய் ......... என்று திருக்குர் ஆனின் (5:116,117,) வசனங்களுக்குப் பொருள் எழுதியுள்ளார். மேலும், மரணிக்க செய்தல் என்பது எவ்வாறு தவஃபாவின் பொருளாக இருக்கிறதோ அதுபோலவே கைப்பற்றுதல் என்பதும் அச்சொல்லுக்குரிய பொருள் தான்.

"உயிர்கள் மரணிக்கும்போதும், மரணிக்காதவைகளை அவற்றின் உறக்கத்தின்போதும் கைப்பற்றுகிறான்." (39:42) இந்த இடத்தில் கைப்பற்றுகிறான் என்றுதான் அதே சொல்லுக்கு பொருள் கொள்கிறோம். மரணிக்கச் செய்தல் என்று பொருள் கொள்வதில்லை. (பக்கம் 47) அவன்தான் உங்களை இரவில் கைப்பற்றுகிறான். (6:60)

இவ்வசனத்தில் அதே சொல் இடம் பெற்றாலும் மரணிக்கச் செய்தல் என்று பொருள் இல்லை தூக்கத்தில் ஒருவரைக் கைப்பற்றுதல் என்பதே இதன் பொருளாக உள்ளது. (பக்கம் 47) என்றும் எழுதியுள்ளார்.


நம் விளக்கம்: திருக்குரானின் வசனத்தைப் பாருங்கள்,

"அல்லாஹ் மக்களின் உயிர்களை அவர்களின் மரணத்தின் போதும், மரணமடையாதவர்களின் உயிர்களை அவர்களின் தூக்கத்தின் போதும் கைப்பற்றுகிறான்."

மக்களின் உயிர்கள் இரண்டு வகைகளில் கைப்பற்றப்படுகிறது. என்று இவ்வசனம் கூறுகிறது.

மரணத்தின்போது

தூக்கத்தின்போது

 
உயிர்களை நிரந்தரமாக கைப்பற்றுதலுக்கு மரணம் என்றும், ரூஹை தற்காலிகமாக கைப்பற்றுதலுக்கு உறக்கம் என்றும் இவ்வசனம் கூறுகிறது.

எனவேதான் இவ்வசனத்தில் தொடர்ந்து "பின்னர் மரணம் முடிவாகிவிட்டவற்றை தன்னிடம் நிறுத்திக் கொள்கிறான். மற்றவற்றை (அதாவது தூக்கத்தில் கைப்பற்றப் பட்டவற்றை) குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு திருப்பி அனுப்பிவிடுகின்றான். சிந்தனை செய்யும் மக்களுக்கு நிச்சயமாக இதில் அடையாளங்கள் உள்ளன" என்று கூறியுள்ளான்.

இவ்வாறு அல்லாஹ் ஒருவனை தவப்பா செய்தான் என்றால் அதற்க்கு ரூஹை(உயிரை) கைப்பற்றிக் கொண்டான். - அவனை மரணமடையச் செய்தான் என்றுதான் பொருள். இவ்வாறே அல்லாஹ் ஒரு மனிதனை தூக்கத்தில் - இரவில் தவப்பா செய்தான் என்றால், அவனுடைய ரூஹை - உயிரை தற்காலிகமாக கைப்பற்றிக் கொண்டான் என்றுதான் பொருள்.

இவ்விரு பொருள்களைத் தவிர வேறு பொருள் இல்லை. அதாவது பி.ஜே தவறாக எழுதியிருப்பது போல் உடலோடு உயிரைக் கைப்பற்றுதல் என்ற ஒரு வினோதமான பொருள் இல்லவே இல்லை என்பதை இவ்வசனம் தெளிவாக விளக்குகிறது.

ஒரு வசனத்தில் தூக்கம், இரவு, என்ற சொற்கள் வராமல் ஒருவரை இறைவன் தவப்பா செய்தான் என்றால் அதற்க்கு அவரை மரணிக்க செய்தான் என்ற பொருளைத் தவிர வேறு எந்த பொருளும் கொடுக்கவே முடியாது. இதை நாங்கள் சவாலாகவே விடுகிறோம்.

பி.ஜே போன்றவர்கள் இவ்வாறு கூறுவார்கள் என்று தெரிந்துதான் எல்லாம் அறிந்த அல்லாஹ் அதற்கு இடம் வைக்காமல் நபி (ஸல்) அவர்கள் மூலம் 5:117,118 வது வசனத்திற்கு ஒரு விளக்கத்தையும் கொடுத்துள்ளான் போலும். அந்த நபி மொழியின் படி ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தன் மக்கள் மத்தியில் வாழ்ந்தகாலம், பின்னர் அங்கிருந்து ரூஹ் மட்டும் கைப்பற்றபடுதல், பின்னர் தன் மரணத்திற்குப் பிறகு தன் தோழர்கள் என்ன செய்தார்கள் என்பது தெரியாத மறுமை வாழ்வு ஆகியவை தனக்கு நடந்தது போன்று ஈஸா நபிக்கும் நடந்தது என்று நபி (ஸல்) அவர்கள் உறுதியாகக் கூறியுள்ளார்கள்.


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ ، أَخْبَرَنَا سُفْيَانُ ، حَدَّثَنَا الْمُغِيرَةُ بْنُ النُّعْمَانِ ، قَالَ : حَدَّثَنِي سَعِيدُ بْنُ جُبَيْرٍ ، عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ :
إِنَّكُمْ مَحْشُورُونَ حُفَاةً عُرَاةً غُرْلًا ، ثُمَّ قَرَأَ كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُهُ وَعْدًا عَلَيْنَا إِنَّا كُنَّا فَاعِلِينَ سورة الأنبياء آية 104 وَأَوَّلُ مَنْ يُكْسَى يَوْمَ الْقِيَامَةِ إِبْرَاهِيمُ ، وَإِنَّ أُنَاسًا مِنْ أَصْحَابِي يُؤْخَذُ بِهِمْ ذَاتَ الشِّمَالِ فَأَقُولُ : أَصْحَابِي ، أَصْحَابِي ، فَيَقُولُ : إِنَّهُمْ لَمْ يَزَالُوا مُرْتَدِّينَ عَلَى أَعْقَابِهِمْ مُنْذُ فَارَقْتَهُمْ فَأَقُولُ كَمَا ، قَالَ : الْعَبْدُ الصَّالِحُ وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ فَلَمَّا تَوَفَّيْتَنِيإِلَى قَوْلِهِ الْعَزِيزُ الْحَكِيمُ سورة المائدة آية 117 - 118

ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:- நியாயத் தீர்ப்பு நாளில் என் உம்மத்தாரிலிருந்து சிலர் நரகத்தின்பால் இழுத்துச் செல்லப்படுவார்கள். அப்போது நான் என் இறைவனே இவர்கள் என் அருமைத் தோழர்கள் எனக் கூறுவேன். இதற்க்கு என்னிடம் உமக்குப் பிறகு இவர்கள் புதுமையாக என்ன செய்தார்கள் என்று நீர் அறிய மாட்டீர்.என்று கூறப்படும். அப்பொழுது நான் அந்த நல்லடியார் (ஈசா நபி)கூறியது போல்(திருக்குர்ஆன் வசனம்
5:117) நான் அவர்களோடு இருந்த காலம் வரை அவர்களுக்குசாட்சியாக இருந்தேன். ஆனால் நீ என்னை மரணிக்கச் செய்த பிறகு நீயேஅவர்களின் கண்காணிப்பாளனாக இருந்தாய் என்று கூறுவேன். அப்பொழுது நீர் இவர்களை விட்டு பிரிந்ததிலிருந்து இவர்கள் மார்க்கத்தை விட்டு திரும்பி போனார்கள் என்று கூறப்படும்." ( புகாரி கிதாபுத் தப்ஸீர் 3349)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இத்திருமொழியில் அந்த நல்லடியார் கூறியது போன்று என்று ஈசா நபியை சுட்டிக்காட்டி, அவர்கள் குர்ஆனின் எந்த சொற்களை உபயோகித்திருக்கிறார்களோ அதே சொல்லான 'வகுன்தும் அலைஹிம் ஷஹீதன் மாதும்து பீஹிம் பலம்ம தவஃப்பைத்தனீ குன்த அன்தர்ரகீப அலைஹிம், அதாவது அவர்களோடு இருந்த காலம் வரை அவர்களுக்கு சாட்சியாக இருந்தேன் ஆனால் நீ என்னை மரணிக்க செய்தபின் நீயே அவர்களின் கண்காணிப்பாளனாக இருந்தாய் என்று கூறியிருக்கிறார்கள். திருக்குரானில் ஈஸா நபி (அலை) அவர்கள் கூறிய இந்த சொற்களில் ஒரு எழுத்துக்கூட மாற்றம் இல்லாத சொல்லாக ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மறுமையில் கூறுகிறார்கள். ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பலம்ம தவபைத்தனீ என்று உபயோகித்த சொல்லிற்கு நீ என்னை மரணிக்க செய்தபின் என்று சரியான பொருள் கொடுத்திருக்கும் போது, ஈசா (அலை) அவர்கள் கூறும் அதே சொல்லான பலம்ம தவஃபைத்தனீ என்ற சொல்லுக்கு 'நீ என்னை (உடலோடு வானத்திற்கு) கைப்பற்றிய பின்.' என்று விளக்கம் கொடுப்பது என்ன நியாயத்தில் இருக்கிறது.

நபி(ஸல்) அவர்களுக்காக கொடுக்கப்பட்ட சரியான பொருளாகிய 'நீ என்னை மரணிக்க செய்தபின்' என்ற பொருளையே ஈசா(அலை) அவர்களுக்கும் கொடுத்து இந்த பூமியில் ஈசா நபி இறந்துவிட்டார்கள் என்றும், அவர்கள் இறந்த பின் அவர்களைப் பின்பற்றிய மக்கள் அவர்களை இறைவனாகவும், இறைவனின் குமாரனாகவும் வணங்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றும் உறுதியான நம்பிக்கைக் கொண்டு திருக்குரானுக்கு எதிரான நம்பிக்கையினால் ஏற்படும் குற்றத்திலிருந்து விலகிக் கொள்ளவேண்டும்

பி.ஜே கொடுக்கும் பொருளை நாம் கொடுத்தால் (பலம்ம தவபைத்தனி என்ற சொல்லுக்கு உடலைக் கைப்பற்றுதல்) நபி (ஸல்) அவர்களும் வானத்தில் உயிரோடு இருக்கிறார்கள் என்று நம்ப வேண்டி வரும். இவர் நம்ப தயாரா?

நபி (ஸல்) அவர்களே இந்த வசனத்திற்கு தெளிவான விளக்கம் தந்த பிறகு. அந்த வசனத்திற்கு வேறொரு விளக்கத்தை கொடுக்கிறார் என்றால் இவரை நாம் எப்படி நபி(ஸல்) அவர்களை பின்பற்றுபவர் என்று சொல்லமுடியும். இவர் தன்னை திருத்திக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் மக்கள் மத்தியில் அவமானப்படப்போவது உறுதி.