அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

இமாம் மஹ்தி(அலை) அவர்கள் மக்களின் பணத்தை மோசடி செய்தார்களா? - கடையநல்லூர் அக்ஸாவிற்கு பதில்


அல்லாஹ் கூறுகின்றான்:

"மேலும் நிச்சயமாக உமக்கு முன்னரும் தூதர்கள் ஏளனத்திற்கு ஆளானார்கள். ஆனால் அவர்கள் எந்த ஆக்கினையைக் குறித்து ஏளனம் செய்தார்களோ அதே ஆக்கினை அவர்களை வந்தடைந்தது"

"உலகை சுற்றிப் பாருங்கள் நபிமார்களைப் பொய்யராக்கி கொண்டிருந்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைக் காணுங்கள்" என்று (நபியே நீர் அவைகளுக்குக்) கூறுவீராக!

இன்னுமொன்றையும் அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் அஹ்மதியா இயக்கம் இறைவனால் உருவாக்கப்பட்ட ஓர் ஆன்மீக இயக்கமாகும். இதனை எதிர்த்தவர்களெல்லாம் தோல்வியையே தழுவியிருந்தார்கள். ஆனால் அஹ்மதிய்யா இயக்கமோ எவ்வித தங்கு தடையுமின்றி வெற்றி நடை போட்டே வந்திருக்கின்றது இதனை அஹ்மதிய்யா இயக்கத்தை எதிர்திருந்தவர்களே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் 'அல்-முனீர்'எனும் ஏடு கூறுவதைப் பாருங்கள்.

"நம்முடைய மதிப்பிற்குரிய பல ஆலிம்கள் தமது எல்லா தகுதிகளுடன் 'காதியானியத்தை' எதிர்த்திருந்தார்கள். ஆனால் 'காதியானி ஜமாஅத்' முன்பை விட அதிக பலத்துடன் உலகெங்கும் பரவிக்கொண்டிருப்பதை நம்மால் காணமுடிகிறது. மிர்ஸா சாஹிபுக் கெதிராக பணியாற்றியவர்களின் ஸையித் நதீர் ஹுசைன் தெஹ்லவி, மௌலான அன்வர்ஷா தேவ்பந்தி, மௌலான முஹம்மத் ஹுசைன் பட்டாலவி, மௌலான சனாவுல்லாஹ் அமிர்தசரி போன்ற பெரியவர்களைப் பற்றி கூறுவதென்றால் அவர்கள் உளப்பூர்வமாக'காதியானியத்தை' எதிர்த்திருந்தார்கள் என்றே கூற வேண்டும். ஆனால் அத்துணை பலமான எதிர்ப்பிருந்தும் காதியானி ஜமாஅத் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறதென்பது ஒரு கசப்பான உண்மையே ஆகும் (அல் முனீர்)

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் ஆரம்ப நாட்களில் பராஹீனே அஹ்மதியாவின் நான்கு பாகங்கள் எழுதியிருந்தார்கள். பிறகு 1905 ஆம் ஆண்டு ஐந்தாவது பாகத்தை எழுதினார்கள். இந்த ஐந்து பாகங்களும் எந்த அளவுக்கு அதிக பக்கங்களை கொண்ட 5 நூல்களாக இருந்தனவென்றால் அவை 50 பாகங்களுக்கு சமமானவையாகவே இருந்தன. அதிலுள்ள தெளிவான ஆதாரங்கள் மறுக்க முடியாத சான்றுகளும் 50 பாகங்கள் எழுதவேண்டிய அவர்களது நோக்கத்தை நிறைவு செய்துவிட்டன. எனவே, இஸ்லாத்தின் உண்மைக்கும் ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் உண்மைக்கும் இந்த நூலில் அன்னார் எழுதியுள்ள சான்றுகளை இன்று வரை மாற்று மதத்தை சார்ந்த எவராலும் மறுக்க முடியவில்லை.

இதற்குப் பிறகுதான் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் இஸ்லாத்தின் உண்மையை நிரூபித்து காட்டும் வகையில் மேலும் 80 நூல்களை எழுதியுள்ளார்கள். மாற்று மதத்தவர்களை இஸ்லாத்தின் உண்மையை நிரூபிக்கும் முகமாக போட்டிக்கு அழைத்தவாறு அவர்கள் எழுதிய சில நூல்களை (அவற்றின் பெயரை) இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

1. ஆயினே கமாலாத்தே இஸ்லாம்

2. சுர்மா சஸ்மே ஆரியா

3. நூருல் குர் ஆன்

4. ஜங்கே முகத்தஸ்

5. சஸ்மயே மஸீஹ்

6. சிராஜுத்தீன் ஈஸாயி கே சார் சவாலோன் கே ஜவாப்

7. சத் பஜன்

இது போன்ற இன்னும் பிற நூல்களையும் சேர்த்துப் பார்ப்பதாயிருந்தால் அவற்றின் பக்கங்கள் பராஹீனே அஹ்மதியாவின் 50 பாகங்களிலுள்ள பக்கங்களை விட குறைவாகத்தான் இருக்கும்.

பராஹீனே அஹ்மதிய்யாவின் மற்ற பாகங்களை எழுதுவதை விட்டுவிட்டு மற்ற நூல்களைஎழுதுவதன் பக்கம் அவர்களது கவனம் திரும்பியது கூட இறைவனின் கட்டளையினாலேயாகும். ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் இது தொடர்பாக இவ்வாறு கூறுகின்றார்கள்.

ஆரம்பத்தில் இந்த நூலை (பராஹீனே அஹ்மதிய்யாவை) எழுதிய சமயத்தில் இதன் நிலை வேறானதாக இருந்தது இதற்குப் பிறகு இறைவனின் வல்லமையின் திடீர் வெளிப்பாடானது இந்த எளியவனுக்கு இதற்க்கு முன்னர் நான் அறியாத ஒரு உலகத்தை பற்றி தெரிவித்தது ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்களை போன்றே இந்த எளியவன் எனது சுய எண்ணங்களின் இருள்களில் பயணம் மேற்கொண்டிருந்த சமயத்தில் திரை மறைவிலிருந்து "இன்னி அன ரப்புக" (நான் உனது இறைவன்) என்ற குரல் வந்தது. இதுவரை எனது அறிவுக்கு எட்டாத பிற ஞானங்களும் வெளிப்படுத்தப்பட்டன. இப்போது இந்த நூலை எழுதுவதில் எனக்கு வழிகாட்டுபவனும் உதவி செய்பவனும் ரப்புல் ஆலமீனாக இருக்கின்றான். இதனை எந்த அளவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அவன் நாடியுள்ளான் என்று தெரியாது. உண்மை என்னவென்றால் இதன் நான்கு பாகங்கள் வரை இஸ்லாத்தின் உண்மைக்கு ஆதரவாக நாம் எழுதியவை அனைத்துமே தெளிவை நிறைவடைய செய்ய போதுமானவையாகும். எதுவரை எல்லா சந்தேகங்களின் இருள்களும் அகலவில்லையோ அதுவரை இறைவனின் அருளும் கருணையும் நமக்கு துணையாக நின்று உதவி செய்யும் என்று நான் நம்புகின்றேன். (Title page Barahin-E-Ahmadiyyaa பாகம் 4)

எனவே நிலைமைகள் மாறியதற்கு ஏற்ப்பவே ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் தமது வாக்குறுதியிலும் மாற்றம் செய்தார்கள்.

நபிமொழி

முஜாஹித் அவர்கள் அறிவிக்கிறார்கள் . யூதர்கள் குரைசியர்களிடம் இந்த நபியிடம் ரூஹ்,குகைவாசிகள் (அஸ்ஹாபுல் கஹ்ப்), துல்கர்னைன் தொடர்பாக கேளுங்கள் என்றனர். நபி(ஸல்) அவர்களிடம் இவை பற்றி கேட்டார்கள் அதற்க்கு "நாளை வாருங்கள், இந்தக் கேள்விகளுக்கு அப்போது நான் பதில் கூறுவேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். இதில் எந்த விதிவிலக்கையும் அவர்கள் கூறவில்லை. இதற்குப் பிறகு சில நாட்கள் வரை வஹி வராமல் இருந்தது. அவர்கள் எதுவும் கூறாமல் இருந்ததால் குரைசியர்கள் அவரை பொய்யர் என்று கூறினார்கள். (தப்சீர் கமாலைன், ஜலாலைன் அடிக்குறிப்பு பக்கம் 241 முஜ்தபாயி)

ஆக இறை நாட்டத்திற்கேற்ப வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. வாக்குறுதி கொடுத்தவர் தமது தப்பெண்ணம் காரணமாக அதை நிறைவேற்றாமல் இருந்தால்தான் இறைவனால் பிடிக்கப்பட தகுதியுடையவராகின்றார்.

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் கூறுகிறார்கள்:- நாம் இரண்டு முறை பிரசுரம் மூலம் எவர் பராஹீனே அஹ்மதிய்யாவிற்காக அவர் தந்த தொகையை திரும்பப் பெற விரும்புகிறாரோ அவர் புத்தகத்தை தம்மிடம் ஒப்படைத்துவிட்டு தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தேன். பலர் அவ்வாறு புத்தகத்தை திருப்பி அனுப்பி தொகையை பெற்றுக் கொண்டனர். பலரும் அந்த நூலை மிகவும் மோசமாக சேதப்படுத்தி அனுப்பிய பிறகும்கூட நாம் அவர் தந்த தொகையை அவருக்கு கொடுத்துவிட்டோம். (தப்லீகே ரிஸாலத் பாகம் 7 பக்கம் 87 அய்யாமே ஸுல்ஹ முதல் பதிப்பு பக்கம் 173)