அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

அந்நஜாத்தின் புரோகிதப் புரட்டு.


ஷிர்க்கிலும், குப்ரிலும் மூழ்கியிருப்பவர்களைக் கரை சேர்க்கும் திருப்பணியில் ஈடுபட்டிருப்பதால் நமக்குப் பதிலளிக்கப் பக்கங்களை ஒதுக்க இயலாது என்று பழைய பல்லவியைப் பாடி இப்போது ஒரு புதுப் பூச்சாண்டியைக் காட்டியிருக்கிறது அந்நஜாத் ஏடு "தெளிவான திருக்குர்ஆன் ஆயத்துகளைக் கொண்டும், உண்மைக் ஹதீதுகளைக் கொண்டும் நாம் கேட்டிருக்கும் வரிசையிலேயே ஒரு நூல்" தயாராகிறதாம் அது ஏப்ரலில் 15 வெளிவருமாம். அதன் விலை 10? இப்படி சந்தைக்கு வராது சரக்கிற்கு விலை கூறி, விளம்பரம் தந்து வருமானத்திற்கு வழிகோலியிருக்கிறது நஜாத்! பிழைக்கத் தெரிந்தவர்கள்!!


தன்னைத் தவிர்த்து தெய்வங்களாக அழைக்கப்படுகிறவர்கள் அனைவரும் மரணித்துப் போனவர்கள் உயிருடன் உள்ளவர்கள் அல்ல என அல்லாஹ் தனது தூய திருமறையில் திட்டவட்டமாக தெளிவாக அறிவித்துள்ளான். ஆனால் இவர்களோ கிறிஸ்தவர்களால் தெய்வமாக அழைக்கப்படும் ஈசா நபி உயிருடன் இருப்பதாக நம்புகிறார்கள். அதாவது, அல்லாஹ் தனது ஏகத்துவ நிலைக்கு தரும் சான்றை இவர்கள் மறுக்கிறார்கள் இதைவிட கொடிய ஷிர்க் குப்ர் என்ன இருக்கமுடியும்? இப்படிப்பட்ட ஷிர்க்கையும் குப்ரையும் தங்களின் இதயங்களில் வைத்துக்கொண்டு இவர்களால் எப்படி மற்றவர்களின் அறியாமையைப் போக்க முடியும்? குருடர்களால் குருடர்களுக்கு வழிகாட்டிட இயலுமா?

ஈசா (அலை) அவர்கள் தம்மை இறைத்தூதராக அறிவித்தபோது அக்கால யூதப் புரோகிதர்கள் வானத்திலிருந்து எலியா வரவேண்டும் என வாதித்தார்களாம். அதே புரோகிதத்தைதான் இப்போது இவர்களும் கைக் கொண்டுள்ளார்கள்.

"இஜ்மாவுல் யஹூதி அலா அன் லா நபிய்ய ப அத மூஸா"

மூஸா (அலை) அவர்களுக்குப் பிறகு நபி இல்லை என்பது யூதர்களுடைய ஏகோபித்த கருத்தாக இருந்தது. (முஸல்ல முஸ்ஸு பூத் பாகம் 2, பக்கம் 170)

நபிபெருமானார் (ஸல்) அவர்களுக்குப் பிறகு யாரும் நபியாக வரஇயலாது என்று கூறும் இவர்களின் புரோகிதத்திற்க்கும் மேற்கண்ட யூத புரோகிதத்திற்க்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?

புரோகிததிற்க்கும் முல்லாயிசத்திற்க்கும் முடிவு கட்டி இஸ்லாத்தை உள்ளது உள்ளபடியே உலகுக்குச் சொல்லும் ஓர் இயக்கம் உண்டென்றால் அது அஹ்மதியா இயக்கமே! "முல்லாக்களுக்கு வெண்சாமரம் வீசி புரோகிதத்தை நிலை நாட்டும் முடக்குவாதம்" என நம்மிடம் கூறுவதுபோல் கூறி வேறு யாரையோ சாடியிருக்கிறது அந்நஜாத் ஒருவேளை, 'நஜாத்' திலிருந்து விலகி 'புரட்சி'க்குத்தாவியிருக்கும் புரோகிதருக்கு வெண்சாமரம் வீசப் போய்விட்ட தனது முன்னால் ஆதரவாளர்களை இவ்வாறு மறைமுகமாகத் அந்நஜாத் தாக்குகிறதோ நாம் அறியோம்!

ஈசா நபியவர்கள ஈராயிரம் ஆண்டுகளாக இன்னும் உயிருடன் உள்ளார் என்பதற்கோ அண்ணல் நபி பெருமானார் (ஸல்) அவர்கள் இறுதி நபி என்பதற்கோ திருக்குரானிலாகட்டும் ஹதீஸ்களிலாகட்டும் எவ்விதமான சான்றும் இல்லை. எனவே ஏப்ரலில் நஜாத் வெளியிடப்போவதாக அறிவித்திருக்கும் நூல் பாமர முஸ்லிம்களை ஏப்ரல் முட்டாள் ஆக்குவதற்கே யாகும். அத்தகையதொரு நூல்வெளிவருமானால் அதில் காணப்படும் தகிடுதத்தங்களை அம்பலப்படுத்தும் நூலொன்றை வெளியிட்டு வேண்டுவோருக்கு அதனை இலவசமாகத் தருவோம் இன்ஷா அல்லாஹ் !